இலங்கை கடற்படையால் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 3288 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 558 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டாலும், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இலங்கை மீனவர்கள் வாக்குகளை பெறுவதற்காக திட்டமிட்டு கைது நடவடிக்கையை இலங்கை அரசு அதிகரித்துள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
மீனவர்கள் மீதான கைது எண்ணிக்கை அதிகரித்துள்ளது
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசுகையில், சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளதை உணர முடிகிறது என்றார்.
“மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, தமிழக மீனவ அமைப்பினர் உள்ளிட்டோருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர் பிரச்னை குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். இலங்கையில் தேர்தல் முடிந்த பின்னர் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக ஜெயசங்கர் தெரிவித்தார்,” என்று பிபிசி தமிழிடம் விவரித்தார் அனிதா ராதாகிருஷ்ணன்.
மீனவர்கள் கைது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இந்திய பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
எனினும் சமீப காலமாக, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் சம்பவங்களும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை அரசு வெளிநாட்டு மீன்படி சட்டதிருத்தம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments